வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க............... தென் கொரிய பயண டைரி




யாருடா அந்த வாசகர்கள்னு உங்களயே ஒருத்தர ஒருத்தர் மாத்தி கேட்டு டைம் வேஸ்ட் பண்றதுக்கு பதிலா, கீழ உள்ள போஸ்ட வாசிச்சு உங்க வாழ்க்கைல ஒரு நாள உபயோகமா செலவழிச்ச பெருமைய என்னால பெற்றுக்கோங்க. போங்க !!!
 
தென் கொரியா பயணம். நினைத்துப் பார்க்கவே இல்லை. நினைத்து வைத்திருந்த இடங்களில் தென் கொரியா இருந்ததும் இல்லை.  

தென் கொரியா என்றதும், ஆ!! ஐயோ!! கொரியாவா? நான் கொரியன் சிரீஸ் ஒன்னு விடாம பாப்பேன்னு பேசிக் கொண்ட இளசுகள் கூட்டம் ஒரு பக்கம். வந்து ஆறு மாதங்கள் ஆகியும், இந்தியாவில் வைத்து பலரால் பரிந்துரைக்கப்பட்டு பார்த்த 'பாரசைட்' படம் தவிர வேறு ஏதும் பார்த்த நியாபகம் இல்லை. அதுவும் கொரியன் படம் என்பது பார்க்க ஆரம்பித்த பின்னர் தான் தெரிந்தது.. என்ன முக சைஸ் எல்லாம் இங்கிலீஷ்காரன் மாதிரி இல்லையே என்று சந்தேகம் வந்து கூகுளை தட்டிய போது தான் தெரிந்துகொண்டேன்.  


மற்றொரு கூட்டம் கிளம்புவதற்கு அரை மணி நேரம் முன்னர் தான், போய் வருவதாக தகவல் தெரிவிக்கிறேன் என்று தெரிந்திருந்தும் 'கொரியா' என்றவுடன், கொரியாவா? அங்க இப்போ தான கொரோனா இருந்தவங்கள எல்லாம் சுட்டு தள்ளிட்டாங்கன்னு செய்தி படிச்சேன் ! நான் இங்கு பயணமாவதற்கு சில நாட்கள் முன்னர் தான் இந்த செய்தி பறவி சூடு ஆறாமலிருந்தது என்னவோ சரி தான். ஆனாலும் பயணமாக எத்தனித்திருந்த வேளையிலும் தங்களுக்கு தெரிந்த ஜிகேயை கூறி பீதியை கிளப்புவதில் எத்தனை ஆர்வம். இது வட அல்ல தென் கொரியா என்று மக்களின் பயத்தைப் போக்கிவிட்டு  பயணமானோம். 


போய் இறங்கியவுடன் 14 நாள் கடும் குவாரண்டைன் என்பதைத் தவிர, பயணம் முழுதும் புது தேசம் பார்க்கப் போகும் பரபரப்பு மனதில் குறையாமலிருந்தது. இரவு 10 மணிக்கு மலயாவிலிருந்து கிளம்பிய டிரான்ஸிட் விமானத்தில், அதிகாலை 4 மணிக்கு எழுப்பி உணவு தந்தார்கள். வெஜிடேரியன் தெர்ந்தெடுத்து இருந்ததால் விவகாரமாய் எதுவும் தரவில்லை. புண்ணியத்திற்கு சோறு இருந்தது. பின் இருக்கையில் இருந்த நாகர்கோவில் பாட்டி அழைத்து ஏ மக்கா, இது என்னா பாத்து சொல்லேன் என்றதும் தான், தயிர் இருந்ததும் தெரிந்தது. வேறு என்ன இருந்தது என்பது நினைவில் இல்லை. ஆனால், மலயா ஏர்போர்ட்டில் இருந்த grandmama’s kitchen ஓட்டலும், nasi lemak என்ற மலேசியாவின் தமிழ் மணம் கலந்த கரிக்குழம்பு சோறும் கூடவே கருவாடும், தே தாரிக் என்ற பால் டீயும், தமிழ் பேசும் சர்வர் அக்காக்களும் நன்றாகவே இன்று வரை நியாபகத்தில் இருக்கிறார்கள். ஊரை விட்டு வந்த உணர்வு வந்தது ஏரோபிளேன் உணவு தந்த பின்னர் தான். சென்னையில் இருந்து கொரியா செல்லும் விமானம் என்பதாலும், மலேசியாவில் அளவுக்கு அதிகமான லேஓவர் டைம் இருந்ததாலும், பயணித்த 40-50 பயணிகளில், 30 பயணிகளுக்கு மேல் பரிட்சயம் ஆகி இருந்தார்கள். 30 பேரும் ஒன்றாக சென்று உணவருந்த செல்வதும், வருவதுமாக கொரியாவில் இறங்கி தங்குமிடம் செல்லும் வரை தமிழக மணம் கமழ்ந்தது.

 

மலேசியாவின் NASI LEMAK


FLIGHT சாப்பாடு

 

விடியற்காலை 6-6:30 மணிக்கு கொரியாவின் இன்ச்சியான் நகரில் தரையிறங்கியது விமானம். நம்மூர் மணிக்கு நடுநிசி 3:00. இருந்தும் வந்திறங்கியதும் கை பரபரத்தது. யாரிடமாவது சொல்லியாக வேண்டுமே. அழைத்தேன் என் கடைக்குட்டி தம்பிக்கு. அவன் தான் திட்ட மாட்டான் என்பதால். ஹிஹி. வந்திறங்கிய செய்தி சொல்லி முடித்தும், போனை வைக்க விடவில்லை. ஏர்போர்ட்டை சுற்றி காமிக்க ஆரம்பித்து விட்டேன். டாய்லெட் செல்ல வேண்டுமே என்ற அவசர அழைப்பினால், ரொம்ப நேரம் பேச டைம் இல்ல, பிறகு பேசுகிறேன் என்று அழைப்பை துண்டிக்க நேர்ந்தது. சுற்றி ஏதேதோ எழுதி இருந்தார்கள். பாஷை புரியாததை ஏதேதோ என்றுதானே சொல்லியாக வேண்டும். 


ஏற்கனவே வேற்று தேசம் வந்திறங்கியதால், பெற்ற புத்துணர்ச்சியை, முகம் அலம்பி மேலும் புதுப்பித்து, முக்கால் கிலோ மீட்டர் நகரும் நடைபாதையில் நின்று சென்று, temperature சரி பார்க்க க்யூவில் நிற்கும் போது மனம் பதக் பதக் என்றது. கழுத்தை தொட்டு தொட்டு பார்த்துக் கொண்டேன். உடல் சூடு சரியாக காமிக்க, அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஆயத்தமாகின. கைப்பிள்ளையுடன் எங்களுடன் வந்த சக பயணி பெண் தோழிக்கு temperature அதிகமாக காண்பித்ததால், அதற்கு மேல் அனுமதிக்கப்படாமல், நேராக கொரோனா டெஸ்டிற்கு அழைத்துச் சென்றது மட்டுமல்லாமல், ரிஸல்ட் நெகடிவ் என வரும் வரை 1 மணி நேர பயணம் தூரம் உள்ள கொரோனா காப்பகத்துக்கு கூட்டிச் சென்று தனி ரூமிற்குள் அடைத்து வைத்து விட்டார்களாம். 


சரி விட்டுப்போன அடுத்தக்கட்டத்துக்கு வருவோம் வாங்க. முன் நின்ற க்யூ முடிந்து எங்கள் வாய்ப்பு வந்தது. கண்ணாடிக்கு அந்த பக்கம் அமர்ந்திருந்த  இருவர், தொலைபேசியில் இருந்து, கொரியாவில் இருக்கும், எங்களுக்கு தெரிந்த நபரின் தொலைபேசி எண்ணை கேட்டார்கள், உடைந்த ஆங்கிலத்தில். எங்கள் பக்கம் இருந்த தொலைபேசி எடுத்து இதுதான் கேட்கிறார்கள் என புரிந்து கொண்டு, கைபேசியை காண்பித்தோம். அழைத்து, கொரியாவிற்குள் இருந்தவர் எங்கள் விருந்தாளி தான் என்று உறுதியாக கூறிய பின், அடுத்த பகுதிக்கு தொடர்ந்தோம். ஒவ்வொருவரின் கைப்பேசியிலும் QR CODE மூலம் ஒரு APP டவுன்லோட் செய்யப்பட்டு விட்டதா, அது செயல்பாட்டுக்கு வந்துவிட்டதா என்று உறுதி செய்த பின்னர் தான் அடுத்த கட்டம். 


இந்த APP எதற்காக? நம் நாட்டு ஆரோக்ய சேது போன்ற ஒரு APP. கொரிய நாட்டுக்கு உள்ளே நுழையும் ஒவ்வொருவரும் வந்திறங்கியதும் கொரோனா டெஸ்ட் எடுப்பது மட்டுமல்லாமல், கட்டாய 14 நாள் குவாரண்டைன் அவசியம். இதில் என்ன பிரமாதம் ? என்று யோசித்து முடிப்பதற்குள், குவாரண்டைனில் வெளியே வந்தால் என்ன தெரியவா போகிறது என்று நினைத்துப் பார்ப்பதற்குள், ஆம், அதற்கு தான் இந்த APP. கொடுத்திருக்கும் அட்ரஸை விட்டு வெளியே வந்தால் காட்டி கொடுத்து விடும். அது மட்டுமல்லாமல், தங்க போகும் வீட்டில் தெர்மாமீட்டர் இருக்கும். அதைக்கொண்டு தினம் காலையும் மாலையும் temperature பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்படவில்லை என்றால், நியாபகப்படுத்தும். அதையும் மீறி மறந்துவிட்டாலும், போனில் அழைத்து பதிவு செய்ய சொல்லுவார்கள். அதுமட்டுமல்லாமல், நடு இரவில் கொரோனா கேஸ் நீங்கள் இருக்கும் மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவர்கள் எந்த தெருவைச் சேர்ந்தவர்கள், எத்தனை பேர் அருகில் இருந்திருக்கிறார்கள் முதற்கொண்டு அனைத்து தகவல்களும் கொண்ட அலாரம் அடிக்கும். அணைத்து வைக்கவும் முடியாது. கொரிய மொழியில் தான் எழுதப்பட்டிருக்கும். கொரிய மொழியில் தான் அறிவிப்பும் இருக்கும். இவர்கள் மொழி மீது கொண்டுள்ள ஆர்வத்தை முதன் முதலாக கவனிக்க ஆரம்பித்தேன். 


மீண்டும் விட்டுப்போன அடுத்தக் கட்டத்துக்குச் செல்வோம். மறுபடியும் க்யூவில் நின்று பாஸ்போர்ட், விசா அடங்கிய டாகுமெண்ட்களை கவுண்ட்டரில் நீட்ட, 3-4 நிமிட ஆய்வுக்குப் பின்னர், கையில் ஒரு தாளை தந்தார்கள். டோக்கன் சீட்டு அளவு தான் இருந்தது. என்னவென்று உற்றுப் பார்க்க விசா பெர்மிட்டட் என்று குத்தப்பட்டிருந்தது. பார்த்தவுடன் கிடைத்த ஆனந்தம், எனக்கு அடுத்து வெளியே வர வேண்டிய என் கணவருக்கு பதில், வேறு யாரோ வந்ததில் கொஞ்சம் மங்கிப் போனது. 15 நிமிடம் கழித்து வெளியே வர, அப்பாடா என சந்தோஷத்தை பகிர்ந்தபடி வெளிப்புறம் நோக்கி நடந்தோம். 

கையடக்க ENTRY VISA சீட்டு
 

ஒரே பக்கமாக செல்ல வேண்டிய பயணிகள் அனைவரும் பிரிக்கப்பட்டு குழுவாக அமர்த்தப்பட்டனர். தங்குமிடம் AIRBNB மூலம் ரூம் புக் செய்தவர்களுக்கு wifi இணைக்கப்பட்டிருந்தால், கொள்ளாம். ஆனால், யுனிவர்சடி எங்களுக்கு தரும் இல்லத்தில், wifi வசதி இல்லை என்பதால் ஏர்போர்ட்டிலேயே சிம்கார்டு வாங்கிக் கொள்ளச் சொல்லி அறிவுறுத்தப்பட்டது. அடுத்து வரும் 14 நாள் குவாரண்டைனை கழிக்க தேவையான இண்டர்னெட்டுக்கு 4000 ரூபாய் இந்திய மதிப்பில், 64000 கொரியன் ஓன்(won) கட்டி வாங்கி வர மனசு துணிந்தது. பேமண்டுக்கு இந்தியாவில் WONஆக மாற்ற வழி இல்லாததால், டாலராக மாற்றி வைத்திருந்ததும், அதில் சொற்ப டாலர்களை ஏர்போர்ட்டில் அதிக கமிஷனுக்கு WON ஆக மாற்றி வைத்திருந்ததும் உபயோகப்பட்டது. 

 

சிம்கார்டு வாங்கி திரும்பி வருவதற்குள், என் கணவர் யாரோ புதிதாக ஒரு தமிழரிடம்(தமிழினம் எத்திசை இருப்பினும், அவன் தடம் அறியோம்) பேசிக் கொண்டிருந்தது கண்டு, யார் என விசாரிப்பதற்குள் பிரித்து வைத்திருந்த எங்கள் குழுவை அழைத்து செல்ல வந்துவிட்டனர். ஹை மட்டும் சொல்லி அவசரமாக கூட்டிச் செல்லும் லைனில் இணைய முனைய, வந்திருந்த நபர் எந்த டாலரும் வாங்காமல், 300000 கொரியன் WON (இந்திய மதிப்பில் 20000 ரூபாய்) கையில் கொடுத்துள்ளார் என்று கூறியதும், லைனை கலைத்து திரும்ப ஓடிப்போய் நன்றியும் வணக்கமும் சொல்லிவிட்டு வந்ததில் கொஞ்சம் திருப்தி. மேலே சொல்லி இருந்த, Temperature அதிகமாக காண்பித்த பெண் தோழியின் அறிமுகம் மலேசியா ஏர்போர்ட்டில் கடைசி சில மணி நேரங்களில் தான் கிடைத்தது. ஏற்கனவே கொரியாவில் இருந்துவிட்டு லீவுக்கு தமிழகம் சென்று திரும்புபவர்கள் என்பதால், டாலர்களை எப்படி மாற்றுவது என்று கேட்டுக்கொண்டிருந்தேன். கொரியாவில் இருக்கும் தன் கணவர் தன்னை அழைக்க வரும் போது, நேரில் தெளிவாக சொல்வதாக சொன்னார். இருவரும் அன்றிரவு என்ன பேசினார்களோ தெரியவில்லை. தன் மனைவி கொரோனா காப்பகத்துக்கு அழைத்துச் செல்லப்படவிருந்த வேளையிலும், 300000 கொரியன் Won கொடுத்தது மட்டுமல்லாமல், அடுத்த மாதம் கொரிய சம்பளம் வந்தபின்னர் தந்தால் போதும் என்றும் கூறியிருக்கிறார் பெருந்தன்மையாக. தெரிந்தவர் யாருமே இல்லையே என்ற கலக்கம் சற்று இருந்தபோது, மனிதம் எங்கும் இருக்கிறது, கவலை வேண்டாம் என வரவேற்றது புது தேசம்.

 

லைனில் கூட்டிச் சென்று, எந்த இடம் என கேட்க, டேஜியான் என்றோம். மற்றவர்கள் அவரவர் இடங்களை சொன்னார்கள். எங்களுடன் சேர்ந்த 7-8 பேரை 30 பேர் அமரும் சொகுசு பஸ்சில் 1 மணி நேர பயண தூரம் வரை அழைத்துச் சென்றார்கள். பஸ் உண்மையிலேயே சொகுசாக இருந்தது. முதல் இருக்கையில் அமர்ந்து ஊரைப் பார்த்துக் கொண்டு வந்தேன். பெரிய சாலைகளும், பல மாடி கட்டிடங்களும், இடை இடையிடையே பாலங்களும் அழகாகத்தான் இருந்தது. நம் ஊரில் 2009ல் சேலம் - ஓசூர் தங்க நாற்கர சாலையில் முதன் முதலில் பயணம் செய்த அனுபவம் நினைவில் வந்தது. அகல விரிந்த ரோடுகளும், ஓரங்களில் கண்ணை கவரும் reflectorகளும், சாலையின் நடுவே நெடுக பூத்துக் குலுங்கிய இளஞ்சிவப்பு அரளி மலர்களும் என்னை அன்றிரவு முழுக்க தூங்க விடவில்லை. வாஜ்பாயி அரசின் மிகப்பெரிய சாதனைகளில் இத்திட்டம் முக்கியமான ஒன்று என்பதை வெளி நாட்டு ரோடுகளை பார்த்ததும் திரும்ப நினைத்து ஆமாம் போட்டும் கொண்டேன். வீட்டில் ஒவ்வொருவராய் வீடியோ காலில் அழைத்து, வந்து சேர்ந்த செய்தி சொல்லும் வேலையை ஊரை ரசித்தபடி முடித்துக் கொண்டேன். ஊரை விட ரோட்டில் ஓடும் கார்களை கவனிக்க தான் தோன்றியது. கியாவும், ஹ்யுண்டாயும் தான் அதிகமாக ஓடியது. இரண்டும் கொரிய தயாரிப்பு. ஹுண்டாயின் முக்கால்வாசி வேரியண்ட் கார்கள் நம் நாட்டில் பார்த்திருப்போம். ஒன்றிரண்டைத் தவிர. ஆனால், கியாவின் பல புது வேரியண்ட்களை ஒரு மணி நேர பயணத்திலேயே பார்க்க நேர்ந்தது. பஸ்சும் ஓரிடத்தில் எங்களை இறக்கி விட்டு சென்றது. என்ன பஸ்சுக்கு காசே வாங்கல. வெளி நாட்டினர்னால free trip போல. ரொம்ப நல்லவங்களா இருக்காங்களே என்று ஆச்சர்யப்பட்டுப் போனேன்.

நிஜமாவே சொகுசு பஸ்

 வந்திறங்கியது ரயில்வே ஸ்டேஷன் என்று உள்ளே சென்ற பின்னர் தான் தெரிந்தது. போலீஸ் போல் உடை அணிந்தவர்கள் தனித்தனியே அமர வைத்தார்கள். நாங்கள் அமர்ந்த கவுன்ட்டருக்கு அருகில் பொதுமக்கள் நடமாட்டமே இல்லை. சாண்ட்விச், தண்ணி பாட்டில், ஜீஸ்கள் உள்ளடக்கிய வென்டிங் மெஷின் இருந்தது. ஒரு மணி நேரம் மேலாக காத்திருந்ததால், ஏதோ காசு போட்டு எடுத்துச் சாப்பிட்ட நியாபகம். ரயில் வரும் சமிக்ஞை தெரிந்தவுடன், கவுண்டருக்கு முன் நிற்க சொன்னார்கள். முன் நின்றவர்கள் 1,00,000 won கட்டியதாக கூறியதும் தான், நான் பட்ட ஆச்சர்யம் எல்லாம் புஸ்ஸென்று ஆனது. பஸ்ஸுக்கும் சேர்த்து ரயில் நிலையத்தில் வசூலிக்கிறார்கள். எங்கள் இடத்திற்குச் செல்ல ஆளுக்கு 64000 won(4200ரூ) ஆனது. ரயில் கட்டணம் இவ்வளவு அதிகமாக வசூலிக்கும் சூத்திரம் ரயிலில் ஏறிய பின் தான் புரிந்தது. உங்களுக்கும் புரியும். சற்று பொறுங்கள். 

 

ப்ளாட்பாரமில் 2 நிமிடம் காத்து நிற்க, நின்றிருந்த 8 பேரையும் இடங்களுக்கு ஏற்றார் போல் பிரித்து நிற்க வைத்தார்கள். பளபளப்பான ரயில் ஒன்று முன் வந்து நின்றது. மற்ற தமிழர்களிடம் விடை பெற்று விட்டு, எங்களுடன் வந்த வடஇந்திய பெண்ணையும் அழைத்துக் கொண்டு எங்கள் கோச்சில் ஏறினோம். நாங்கள் 3 பேர் மட்டும் தான் மொத்த கோச்சிலும். வெளி நாட்டில் இருந்து வந்திருப்பதால், கூட வேறு யாரையும் அமர்ந்து செல்ல அனுமதிப்பதில்லை போல. அமர்வு இருக்கைகள் கொண்ட காலியான நீள கோச்சில் டிக்கட்டில் குறிப்பிடிருக்கும் இருக்கையில் அமர மட்டுமே அனுமதி. ரயில் கிளம்பியதுமே வேகமாக நகர்ந்தது ஜன்னலோர காட்சிகள். இருந்தும் அழகாக இருந்தது. கூகுளை தட்டியதும், நாங்கள் செல்லும் 135 கிமீ பயணத்தை 1:45 மணி நேரத்தில் கடக்கக் கூடிய உலகின் அதிவேக ரயிகளில் இதுவும் ஒன்று என கக்கியது. சரி எந்த வழியாக எல்லாம் செல்கிறது என கூகுள் மாப்பை தட்டினால், பெரிய அதிர்ச்சி. கூகுள் மாப்பால் எதையும் காட்ட இயலவில்லை. பின்னர் தான் கூகுளின் சாட்டிலைட் தென் கொரியாவினுள் தடை செய்யப்பட்டுள்ளது என்பது தெரிந்தது. நம்மூரில, அடுத்த தெருக்கு போறதுக்கே கூகுள் அண்ணன கூப்பிடாம போனது கிடையாதே நம்ம. கொஞ்சம் கை உடஞ்ச மாதிரி தான் இருந்தது. இது என்ன பிரமாதம். கூகுள் க்ரோமே இங்க யாரும் பயன்படுத்துறது இல்லங்குறதும், வாஸாப்னா என்னனு வாய பிளக்குறதும் பிறகுதான தெரியது. அதுக்கு பதிலா கொரியாவில் தயாரித்த கொரிய ஆப்கள் கொரிய மொழியில் நல்ல அம்சமா ரெடி பண்ணி வச்சுருக்காங்க என்பது எனக்கு பின்னர் தான் தெரிந்தது. உங்களுக்கும் பின்னாடி சொல்றேன்.

 

டேய்ஜியான் வந்துவிட்டதாக ஆங்கிலத்தில் கூறப்பட்ட தகவலை கவனித்து, இறங்கி தான் நின்றோம். அங்கு ஒரு பெண் காத்து நின்றார். யுனிவர்சிட்டியில் இருந்து அனுப்பிய ஆள் என்று நினைத்து முடிக்கவில்லை, எங்களுடன் இன்னும் 2 பேரை சேர்த்துக் கொண்டு முன்னும் பின்னும் காவலுக்கு இருவர் துணையுடன் வரிசையில் அழைத்துச் சென்றார்கள். ரயில்வே ஸ்டேஷன் பெரிதாகவும் சற்று கூட்டமாகவும் இருக்க, யாரும் எங்களை தொட்டு விடாதபடி காவலர்கள் பார்த்துக் கொள்ள, கருப்பு துணி போட்ட கூடாரத்திற்கு அழைத்துச் சென்றார்கள். பெயர் மற்றும் மற்ற தகவல்கள் பெற்றுக்கொண்டு சிறிது நேரம் காத்திருக்க வைத்தார்கள். அருகில் ஒரு சீன பெண் வூஸாங்க் யுனிவெர்சிடி என்று நாங்கள் பேசிக் கொண்டதை கவனித்து, தானும் அங்கு தான் செல்வதாகவும், போன் சிம்கார்டு வாங்காததால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் முழித்துக் கொண்டிருப்பதை கூறியதும், எங்கள் தொலைபேசி மூலம் ஹாட்ஸ்பாட் போட்டு கொடுத்து தொடர்பு கொள்ள உதவினோம். 

 

சிறிது நேரத்தில் எங்களுடன் வந்த வட இந்திய தோழியோடு சேர்த்து எங்கள் மூன்று பேரையும் அழைத்துச் செல்ல வாகனம் வந்துவிட்டதாக கூற, சென்று பார்த்தால், ஏர்போர்ட்டில் இருந்து ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்த அதே மாதிரியான சொகுசு பஸ் ஒன்று நின்றிருந்தது. தூரமாக செல்ல வேண்டும் போல, அதனால் தான் இத்தனை பெரிய பஸ் என்று சந்தோஷமாக ஏறினோம். உள்ளே ஏறியதும், கொரிய மொழியில் ஏதோ கூறினார் பஸ் ஓட்டுனர். அவரது உடல் அசைவுகளும் முகத்தில் புன்னகையும் வைத்து வரவேற்கிறார் என யூகித்துக் கொண்டு தலையை ஆட்டி ஹலோ என்று ஆங்கிலத்தில் கூறினோம். எடுத்த எடுப்பிலேயே கொரியன் பேசுகிறேன் பேர்வழி என்று கெட்ட வார்த்தையாக போய்விடக் கூடாது என்று கவனமாக இருந்தேன். பஸ் மெதுவாகத் தான் நகர்ந்தது. அதற்குள் கூகுளில் இருந்த நாங்கள் செல்லும் யுனிவர்சிடியின் புகைப்படத்தில் கண்ட அதே பில்டிங். யுனிவர்சிடி தான் பக்கத்துல, வீடு தூரம் போல, அதான் பஸ்ல எல்லாம் கூட்டிட்டு போறாங்க என்று பேசிக் கொண்டோம். ஊர் அழகா இருக்குல்ல என்று ரசித்தபடி பஸ் செல்லும் வழித்தடத்தை கவனிக்க, அகலமான 6 லேன் மலைப்பாதையில் ஏறியது பஸ். ஏறியதும் மலை மேல தான் வீடு இருக்கும் போல என்று சொல்லி குதூகலிப்பதற்குள், சமநிலப்பாதை வந்துவிட்டது. ரயில் நிலையத்திலிருந்து கிளம்பி ஐந்து நிமிடங்கள் தான் ஆகியிருக்கும். அதற்குள் 10 யூகங்களும், அதில் 9 தவறானதும், இனி கருத்தே தெரிவிக்கல என்று கூறி கண் இமைப்பதற்குள் சிக்னல் போட்டு விட்டார்கள். கடைசியாக ஒன்னே ஒன்னு சொல்லிக்குறேன். கண்டிப்பா அரை மணி நேர தூரமாவது இருக்கும் போலயே என்று கூறி முடிக்க, சிக்னல் லைட் பச்சைக் கொடி காட்ட, அடுத்த தெருவில் பஸ் நுழைந்தது. என்ன தெருவுக்குள்ள எல்லாம் பஸ் போகுது? என்று இந்த முறை எச்சரிக்கையாக மனசுக்குள்ளேயே நினைத்துக் கொண்டேன். திரும்ப தான் செய்தது, பஸ் நின்றுவிட்டது. உடன் வந்த வட இந்திய தோழியின் வீடு இதுதான் எனக்கூறி இறங்கச் சொன்னார்கள். என் கணவர் உடன் சென்று நான்காவது மாடி வாசல் வரை விட்டு வர, அடுத்த 30 அடியில் மறுபடியும் பஸ் நின்றது. 

ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கண்ணெட்டும் தூரத்தில் யுனிவர்சிடி

 அதுதான் எங்களுக்கான வீடு இருந்த அபார்ட்மெண்ட். அழகாக இருக்கிறது என்று மனம் துள்ளியது. இரண்டாவது மாடியில் 204 வீட்டு நம்பர். கொரிய லிப்டுகள் 1ல் தான் ஆரம்பிக்கிறது. வீட்டு செக்யூரிட்டி கோட் அடங்கிய டாகுமெண்ட் கிளம்புவதற்கு 10 நாட்கள் முன்னரே அனுப்பியிருந்தார்கள். அழுத்தி உள்ளே நுழைந்ததும் கிச்சன் வரவேற்றது. இரண்டு ரூம்கள் பால்கனியுடன் அம்சமாக இருந்தது. இன்று வரை நான் அமர்ந்து ரசிக்கும் முழு நீள கண்ணாடி கொண்ட பால்கனி தான் அன்றும் பிடித்திருந்தது. அதே பால்கனி வழியாக இறக்கி விட்ட பஸ் சென்றதை பார்த்ததும், இதுக்கு ஏண்டா இவ்ளோ பெரிய பஸ் புடிச்சு கூட்டிட்டு வரீங்க ? என்ற புதிர் இன்றும் புரியவில்லை. அவ்ளோ கேர்புல்லா இருக்காங்களாம்.

 

சைனாவுக்கு அடுத்து கொரோனாவின் எண்ணிக்கை அதிகமான ஊர்களில் தென்கொரியாவும் ஒன்று, பிப்ரவரி 2020ல். சைனாவுக்கு அடுத்து இருப்பதாலும், தென் கொரியாவில் இருந்த சீனர்கள் அதிகம் வாழும் பகுதியான டேய்குவில் அப்போது வந்த சீன புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக சீன நாட்டு இறைச்சிகளை அதிகம் இறக்குமதி செய்ததாலும் இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. ஆனால், நாங்கள் வந்திறங்கிய செப்டம்பர் மாதத்தில், மொத்த நாட்டின் தினசரி கொரோனா எண்ணிக்கை இரண்டு இலக்கத்தில்(மொத்தமே 10,20 தான் இருந்தது). கொரோனா எண்ணிக்கையில், பெப்ரவரியில் உலகின் இரண்டாவது இடத்தில் இருந்த தென்கொரியா, மே, ஜீன் மாதங்களில், வெளி நாட்டவர் தைரியமாக வந்து போகுமளவுக்கு தன்னை மாற்றிக்கொண்டுவிட்டது. இன்றும் சுற்றுலாவிற்கான விசா தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் (MOON JAE-IN) கீழான அரசை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

 

தொடரும்............... 

 


    



Comments

  1. நல்ல பதிவு, அருமை

    ReplyDelete
  2. Anga "saathi" "madham" lam unda..

    ReplyDelete
  3. அருமையான தகவல்கள்.

    ReplyDelete
  4. உங்கள் பதிவின் மூலம் நானும் பயணித்தேன்! அருமை சகோதரி��

    ReplyDelete
  5. முதலில் தென் கொரியாவை பற்றி எழுதுங்கள் என நான் வைத்த கோரிக்கையை நிறைவேற்றியதற்கு நன்றிகள். அட்டகாசமான பயணக் கட்டுரை அக்கா. வறட்டுத் தனமாக தகவல்களின் கோர்ப்பாக இல்லாமல் தகவல்களை கட்டுரையில் புதைத்து நயமாக தந்துள்ளீர்கள் அருமை.

    நகைச்சுவை தொனியில் ஆன உங்கள் மொழியால் கட்டுரை நீண்டதாக தெரியவில்லை. நம்ம ஊர் அல்வா வாயில் நழுவி செல்வது போல் செல்கிறது கட்டுரை. உங்கள் எழுத்து நடையில் இருக்கும் வாஞ்சை மிகவும் மனதுக்கு இதமாக இருந்தது. பள்ளியில் நண்பர்களுக்கு பயண கதை சொல்லும் பொது தொனிக்கும் ஆர்வம் மற்றும் வாஞ்சையை உங்கள் கட்டுரையில் உணர முடிந்தது.

    பயண அனுபவ கட்டுரையில் உணர்வுகள் தான் பிரதானம் அவை தான் அக்கட்டுரைக்கு சுவை கூட்டுபவை, அவ்வகையில் உங்கள் உணர்வுகளை அளவோடும் அழகாகவும் சொல்லி இருக்கிறீர்கள். கையை இருக பற்றி உங்களோடு அழைத்து சென்று விட்டீர்கள் மகிழ்ச்சி அக்கா.

    இன்னும் தென் கொரியாவை ஆழமாக வரும் கட்டுரைகளில் பதிவு செய்யுங்கள். அந்நாட்டின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் வாழ்க்கை முறை என அனைத்தையும் தெரிந்து கொள்ள நமக்கான படிப்பினைகளை எடுத்துக் கொள்ள ஆர்வமாக உள்ளேன் அக்கா. விரைவில் அடுத்த பாகத்தை எழுதுங்கள். அன்பும் நன்றியும் ❤️🙏🎉🎊🔥🔥

    ReplyDelete
  6. Wild Card City Casino | $$ No Deposit Bonus sbobet ทางเข้า sbobet ทางเข้า クイーンカジノ クイーンカジノ 10cric login 10cric login 22best vr golf games and tournaments

    ReplyDelete

Post a Comment

பிரபலமான பதிவுகள்

அபுதாபி

நைட்

ஐரிஷ் பஞ்சம்

லாக்டவுன் குமுறல்கள்

அண்ணே!!! கைமாத்தா ஒரு பத்தாயிரம் கிடைக்குமா!!!

விஜய் சேதுபதியாக ஒரு நாள் - The power of Artificial Intelligence

Sapiens: A Brief History of Humankind

இந்துக்களின் முதற்கடவுள் பிள்ளை-யார்?: Truth behind the belly baby

இயேசு உண்மையில் உயிர்தெழுந்தாரா? Did Jesus really resurrect?