ஹிலாரி கிளிண்டனும் ரகசிய இமெயிலும் (Hillary Clinton - behind the screen) - 2




இமெயில் விஷயங்களை கண்காணிக்க ஒரு அதிகாரியை தற்காலிகமாக நியமித்திருந்தார், ஒபாமா. (இதுவும் ஒருவேளை ஹிலாரி கிளிண்டனின் தலையீட்டால் இருக்குமோ?) பரவலாக அடுத்த அதிபர் ஹிலாரி தான் என்ற செய்தி இருந்ததால், பல அதிகாரிகள் ஹிலாரியிடம் மோத பயப்பட்டனர். இந்த சூழலில், நியமிக்கப்பட்ட தற்காலிக அதிகாரியும் தனக்கு அளிக்கப்பட்ட குறைந்த அதிகாரத்தைக் கொண்டு ஹிலாரியிடம் மோதுவதை தவிர்த்தார்.

பெங்காஷி விசாரணை குழுவின் கிடுக்குபிடியால் கிளிண்டன், 30,490 இமெயில்களை ஒப்படைத்தார். மீதி 31,839 இமெயில்களை தனது தனிப்பட்டது என்று கூறி தர மறுத்துவிட்டார். முதற்கட்ட விசாரணையில், அரசு சார்ந்த எந்த விஷயங்களையும் இமெயிலில் அனுப்பவில்லை என்று கூறிய அவர், சில அதிர்ச்சி தரும் பதில்களையும் கூறினார். 

பொதுவாக அலுவலக கோப்புகளில் சில குறியீடுகள் இருக்கும். அவசர நேரங்களில் கோப்புகளை தேடுவதற்கும், முக்கிய கோப்புகளை தனியாக வைக்கவும் அது உதவும். இத்தகைய விஷயங்கள் அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். ஹிலாரியின் இமெயில்களை சோதனை செய்ததில், “C” என்று குறிக்கப்பட்ட பல கோப்புகள் அவரின் இமெயிலில் பகிர்ந்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக ஹிலாரியிடம் கேட்டபோது, “அது ஏதோ சும்மா எழுதிருக்காங்கனு நினைச்சேன், C” னா என்னனு எனக்கு உண்மையாவே தெரியாது” என்று கூறிவிட்டார். அத்தனை தற்குறியா ஹிலாரி? வாய்ப்பில்லை. அவர் யேலில் (YALE - பல அமெரிக்க அதிபர்களை உருவாக்கிய பல்கலைக்கழகத்தில்), சட்டம் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை பார்க்கும்போது எனக்கு நம்ம ஊரு “தெர்மோக்கோல்” நியாபகத்திற்கு வந்தது. அமைச்சர் ஒருவர், குளம், அணைகளில் தண்ணீர் ஆவியாவதை தடுக்க தண்ணீரின் மேற்பரப்பை தெர்மோக்கோல் பயன்படுத்தி மூடினார். இதை, இணையம், திரைபடங்கள் மற்றும் சமூகவலைதளத்தில் மக்கள் கிண்டல் செய்தனர். யேல்ல படிச்ச ஒருத்தருக்கே “C” தெரியலயாம், மதுரையில படிச்ச அமைச்சருக்கு மட்டும்??? (இதில் ஒரு உண்மை செய்தி என்னவென்றால், தண்ணீர் ஆவியாவதை தடுக்க வெளிநாட்டில் நடந்த சோதனை ஓட்டத்தில் விஞ்ஞானிகள் தெர்மோக்கோல் பயன்படுத்தியுள்ளனர். அதனால் நம் அமைச்சர் செய்தது முற்றிலும் தவறானது அல்ல. வெளிநாட்டை ஒப்பிட்டால் தானே மக்கள் நம்புகிறார்கள்!!. யாரா இருந்தாலும் கிண்டல் செய்றதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிங்க பாஸ்!!!!)


4 மார்ச் 2015 ல், நீதிமன்றம் ஹிலாரிக்கு ஒரு சம்மன் அனுப்பியது. “தங்களிடம் இருக்கும் மீதி இமெயில்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும்போது விசாரணை குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்” என்பதுதான் சாரம்சம். ஹிலாரியோ சம்மனை பார்த்ததும், முதல் வேலையாக எல்லா இமெயில்களையும் அழித்துவிட்டார். நீதிமன்ற அவமதிப்பு??? ஆனால் இந்த செயலுக்கு கடைசிவரை ஹிலாரி தண்டிக்கபடவேயில்லை. இந்த விஷயம் தெரிந்ததும் விசாரணை குழு விரைந்து சென்று அழிக்கப்பட்ட கோப்புகளை சில மென்பொருட்களை (SOFTWARE) கொண்டு மீட்டனர். இத்தனை நடந்தேறியதால் மக்கள் மத்தியில் ஹிலாரிக்கு கிடைக்க போகும் தண்டனை குறித்து ஆவல் அதிகரித்தது. எதிர்பார்த்தது போல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விரைவாக விசாரணையும் முடிந்தது. விசாரணை குழுவின் மூத்த அதிகாரி செய்தியாளர்களை சந்தித்து விசாரணையின் முடிவை கூறினார். இது அலட்சியத்தால் நடந்த தவறாக தெரியவில்லை, சிறு கவன குறைவால் நடந்திருப்பதாக தெரியவந்துள்ளதால், ஹிலாரிக்கு எந்த தண்டனையும் இந்த குழு பரிந்துரை செய்யவில்லை. மேலும், இந்த வழக்கை வழக்கறிஞர் யாரும் எடுத்து நடத்துவார்களா என்ற சந்தேகத்தாலும் ஹிலாரியை விடுவிக்கிறோம். என்ன சாமி தீர்ப்பு இது? இதுபோன்ற வழக்குகளில், கோப்புகளை முறைகேடாக கையாண்டதில், பலருக்கு தண்டனை, அல்லது அதிபரின் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது. பின்னர், ஏன் ஹிலாரிக்கு மட்டும் விதி விலக்கு? (தொடரும்….)

Comments

பிரபலமான பதிவுகள்

வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க............... தென் கொரிய பயண டைரி

அபுதாபி

நைட்

ஐரிஷ் பஞ்சம்

லாக்டவுன் குமுறல்கள்

அண்ணே!!! கைமாத்தா ஒரு பத்தாயிரம் கிடைக்குமா!!!

விஜய் சேதுபதியாக ஒரு நாள் - The power of Artificial Intelligence

Sapiens: A Brief History of Humankind

இந்துக்களின் முதற்கடவுள் பிள்ளை-யார்?: Truth behind the belly baby

இயேசு உண்மையில் உயிர்தெழுந்தாரா? Did Jesus really resurrect?